ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள்
வியாசர்
மஹாபாரதத்தின்
திரைக்கதை,
வசனம்,
இயக்கத்தோடு
தானும் நடித்தவர்
கங்கை
சந்தனுவோடு
இணைந்தவள்
இந்த நிமிடம் வரை
ஓடிக்கொண்டிருக்கிறாள்
நம்
பாவத்தைத் தொலைக்க
கங்கை
பாவம் போக்கும்..
இங்கே
சந்தனுவுக்கு
பாவத்தை தந்தது
கிருபாசாரியார்
இவரின் பாடத்தால்
பாண்டவர்கள்
நல்லவரானார்கள்
கவுரவர்
தீயவரானார்கள்
ஒரே பாடத்திடடத்தால்
வந்த வினை
கர்ணன்
தேரோட்டியாய் வாழ்க்கையைத் தொடங்கினான்
தேரோட்டியால் வாழ்க்கை முடிந்தது
தர்மர்
பொய்மையும் வாய்மைஇடத்து
இது பொய்யாமொழி
இவரின் பொய்மொழி கூட
புரை தீர்ந்த நனமை பெயர்த்தது
அர்ஜுனன்
இவனது காண்டீபம் ஓயாமல்
அம்பு எய்யும் !
கீதைக்காக
சற்று ஓய்வும் எடுத்தது !
பீமன்
இவனால் திருக்குறள் சற்று
மாற்றி எழுதவேண்டும்
வயிற்றுக்கு உணவு இல்லாதபோது
சற்று
செவிக்கும் ஈயப்படும்
நகுல சகாதேவர்
நகுலன் குதிரைப் பராமரிப்பதால்
அந்தக் கால கால்நடை பராமரிப்பு வாரியம் !
சகாதேவனோ நல்ல தீர்ப்பு சொல்வதில்
அந்தக்காலஉச்சநீதி மன்றம்
திரௌபதி
கூந்தலை முடியாத
அந்தக் கால யுவதி !
ஐந்து வீடு கூட இல்லாத ஏழை
ஆனாலும்
ஆயிரம் பேர் வந்தாலும்
அறுசுவை உண்டி தரும்
அட்சய பாத்திரத்தின்
சொந்தக்காரி !
த்ரோணர்
பிள்ளைப்பாசத்தால்
போரில் உயிர் துறந்த
தளபதி
ஏகலைவனின்
கட்டைவிரல் கேட்டு
தக்ஷிணா தேவியை
தலைகுனிய வைத்தவர்
பீஷ்மர்
அரியணை காக்க
துரியோதனன்
பக்கம் சேர்ந்த
அந்தக்கால
அரசியல்வாதி
எட்டில் (வசு) ஒன்று
பீஷ்மர்
அஷ்டமத்து ச(கு)னி
அழித்தது.
விதுரன்
வில்லைத் துறந்து
போரிட்ட
நீதியரசர்
இருந்தும்
இவர் நீதியால்
திருதராஷ்ரனின்
கண் திறக்கவில்லை
திருதராஷ்டிரன்
கண் தெரியாததால்
துரியோதனனை
தர்ம புத்திரனாய்
நினைத்தவன்
காந்தாரி
பார்வையற்ற
கணவர் போன்று
தான் மகனின் விஷயத்தில்
கண்ணிருந்தும்
பார்வையற்றவள்
குந்தி
அறுவரைப் பெற்றெடுத்தும்
ஐவருக்காக
வாழ்ந்தவள் !
முதல்வனை
ஈன்றபொழுது
பெரிதுவக்காமல்
மாண்டபோது
சான்றோன் என்று
கேட்ட தாய்
துர்வாசர்
பசி வந்திட பத்தும்
பறக்குமாம்
இவருகோ பசி நீங்கியதும்
கோபம் பறந்தது
அக்ஷய பாத்திரத்தின்
அதிசயம்
கிருஷ்ணன்
கையில் ஆயுதம்
எடுக்காமலேயே
அனைவரையும்
அழித்தவன்!
பூ பாரம் குறைத்த
பூபாலன்
போர்க்களத்தில்
வேதாந்தம் பேசினான்
வீரர்களோடு
அறியாமையும் அழிந்தது
துரியோதனன்
தன்னலத்தால்
தருமரை வெறுத்து
தாயாதி சண்டையில்
தொடையில் அடிபட்டு
இறந்தவன்
ஐந்தடி கூடத் தராமல்
ஆறடி மண்ணில் வீழ்ந்தவன்
துச்சாதனன்
துரியோதனன்
நடத்திய புடவைகடையில்
வேலைப் பார்த்து
கண்ணனால்
கை சளைத்தவன்
விகர்ணன்
மகா பாரதத்து
விபீஷணன்
நூறு கவுரவர்களில்
தனியாக போரிட்ட
சுயேச்சை வேட்பாளர்
அசுவத்தாமா
இவனுக்கும்
யானைக்கும்
ஒரே பெயர் வைத்ததனால்
தந்தைக்கே
ஏமன் ஆனவன்
சிரம் சீவினாலும்
சிரஞ்ஜீவி ஆனவன்
அபிமன்யு
வீரத்தை நம்பி
வியூகத்தில் புகுந்தவன்
சதி வியூகம்
தெரியாத
சின்னப்பையன்
புகலிடம் இல்லாத
புகழாளன்
சிசுபாலன்
தலை கனத்தால்
தலை இழந்தவன்
நூறாவது தூற்றலில் தன்
நாடித்துடிப்பை
துறந்தவன்
ஜயத்ரதன்
பக்தனின்எதிரி
பகவானுக்கும்
எதிரி
என்பதை
நிரூபிக்க
வைத்தவன்
சகுனி
மருமகனைத்
தூண்டி
மகாபாரதப்
போருக்கு
அடிக்கல் நாட்டிய
அரசியல்வாதி !
அவன் பெயரில்
கு வை நீக்க
குந்தி புத்திரர்க்கு
சனி ஆனவன்
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 66
மிக அருமை
பிரமாதம்…..
நன்றி !
அருமை