இவள் பெயர் சுந்தரி! யமுனைக் கரையில் வசித்த ஓர் ஏழைப் பெண். கண்ணனை ஒரு தலையாகக் காதலித்தவள். சுயமாக தன்னிடம் உள்ள கூச்ச சுபாவத்தின் காரணமாக கண்ணனிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்லாமல் இருந்து விட்டாள். இவளை யாரும் கண்டு கொள்ளவில்லை. இருந்தும் கண்ணன் யமுனை நதிக்கரையில் எல்லா கோபிகைகளுடன் குறிப்பாக ராதையிடம் நெருங்கிப் பழகுவதைக் கண்டு பொறாமைப்படுகிறாள்.
முடிவில் ஏழு நாட்கள் விரக தாபத்துடன் தனிமையில் பாடி உண்ணா நோன்பு இருந்து தன் உடலைத் துறக்கிறாள். அவளின் இந்த ஒரு தலைக் காதலையும், பொறாமையும், தவிப்பையும் காதல் ரசத்துடன் அந்த ஏழு நாட்களின் தவிப்பை ஏழு பாடல்களாக கவியோகியின் பாடல்களின் மூலமாக வெளிப்படுத்துகிறாள். பாகவதத்தில் கூட இவள் பெயர் இடம்பெறவில்லை, ஏனென்றால், இவள் கற்பனை கதாபாத்திரம் ஆயிற்றே, இருந்தாலும் கண்ணனின் கதையை கேட்க தடை ஏது? வாருங்கள், அவளுடன் அழுது பாடலாம்.
*முதல் நாள்!*
காதலிக்க மறந்ததேனோ கண்ணா
போதம் மிகுந்த என்னை மட்டும் (கா)
இத்தனை நாள் உனக்காக
காத்துக் கிடந்தேனே
இந்த யமுனைக் கரையிலே (கா)
சுந்தரி என்னை சுற்றி வருவாய் என்று
நித்தம் நித்தம் நினைத்து நின்றேனே
பித்து பிடித்ததடா போகாயம் தகிக்குதடா
சித்து வேலை செய்ய சுந்தரி இருக்கையிலே (கா)
என்னை விட்டு நகராதே அந்த
பொல்லாத ராதையிடம் போகாதே
இல்லத்தரசியாக நானிருக்க வேறு
நல்லவள் உனக்கு யார் கிடைப்பார்? (கா)
*இரண்டாம் நாள்*
யமுனை ஆற்றில் மூழ்கி எழுந்தேன்
கண்ணா உன் உடல் பட்ட இந்த அழகிய (ய)
தாபம் தீரவில்லை தண்ணீரில் குளிர்ச்சியில்லை
உன் மீது எந்தன் காதல் சற்றும் குறையவில்லை (ய)
கட்டிப் பிடித்து உன்னோடு கலக்க வேண்டும்
மெட்டி அணிவித்து என்னை மணக்க வேண்டும்
இட்டமுடன் இந்த யமுனையில் இணைய வேண்டும்
கட்டமிது தெரியாமல் உனக்கேன் கடின மனம் கண்ணா (ய)
வா
கூட வா
என்னிடம் கூட வா
சுந்தரி என்னிடம் கூட வா
கண்ணா சுந்தரி என்னிடம் கூட வா
அழகிய கண்ணா சுந்தரி என்னிடம் கூட வா
உடல் அழகிய கண்ணா சுந்தரி என்னிடம் கூட வா
கருத்த உடல் அழகிய கண்ணா சுந்தரி என்னிடம் கூட வா (ய)
*மூன்றாம் நாள்*
இன்றும் போச்சே கண்ணா
இனியும் நீ வர மாட்டாயா கண்ணா (இ)
ராதை விட வில்லையா?
இல்லை உனக்கு அவளிடம்
இன்னும்
போதை விட வில்லையா? (இ)
உடல் கொதிக்கிறது
உள்ளம் தவிக்கிறது
உன்னை நினைத்து நினைத்து
உடல் கொதிக்கிறது
உள்ளம் தவிக்கிறது (இ)
எல்லாரும் சேர்ந்து கொண்டு என்னை
தவிக்க விடலாமோ
கள்ளத் தனமாக ஒரு நாளேனும்
என்னிடம் வரத் தயக்கமேனோ (இ)
*நான்காம் நாள்*
கட்டி அணைக்க மனம் விரும்புதே கண்ணா
எட்டிக் காயாய் கசக்குதே உன்னைப் பிரிந்தால் (க)
பட்டி தொட்டியெல்லாம் இருக்கும் பாவிகள்
ஒட்டி உன்னை உறவாடுகிறார்களே (க)
நிட்டையில் இருக்கும் ஞானிகள் ரிஷிகள்
சுட்டிக் காட்டி உன்னைப் பரமென்று கூறுறார்
தட்டி தட்டி உன்னை தினமும் அழைக்கிறேன்
எட்டிப் பார்க்கும் எண்ணம் உனக்கு ஏன் இல்லை (க)
அட்டிகை ஆபரணம் ஏதும் என்னிடம் இல்லையே
விட்டுப் போக அது பெரிய காரணம் இல்லையே
சிட்ட சுரத்தொடு சங்கராபரணம் பாடத் தெரியாது
கட்டை இது வேகும் முன் உன்னை உன்னை (க)
*ஐந்தாம் நாள்*
கெஞ்சிக் கேட்கிறேன் கண்ணா என்னை
கொஞ்ச கொஞ்சம் வாராயோ மன்னா (கெ)
அஞ்சு நாளாச்சு பேச்சரவம் கேட்கவில்லை
நெஞ்சு படபடக்க நல்ல நிலைமையில்லை
(கெ)
ஊஞ்ச விருத்தி பாகவதர் உன்னை உரக்க அழைக்கிறாரோ
தஞ்சம் அடைந்த என்னிடம் தயவு சிறிதும் இல்லையோ
மஞ்சம் விரித்து வைத்தேன் மலர் மணம் வீசவில்லையோ
சஞ்சரித்து ராதையவள் உந்தன் சிரசில் கால் வைக்கிறாளோ (கெ)
நிலவும் சுடுகிறதே நீள் விசும்பு கருக்து இருள் சூழ்கிறதே
கலவி இன்பம் அனுபவிக்க பேதை நெஞ்சம் நினைக்கிறதே
பலவிதமாக எண்ணி எண்ணி மனம் பதை பதைக்கிறதே
குலவி குலாவி உன்னை கோபிகைகள் கட்டி வைத்தனரோ (கெ)
*ஆறாம் நாள்*
ஆறவில்லையே மனம் கண்ணா
சுந்தரி எந்தன் குரல் சேரவில்லையே
உந்தன் செவியில் (ஆ)
போறவில்லையே எந்தன் அழகு உனக்கு
தாரமாய் எனை ஆக்க தயவுமில்லையே (ஆ)
மாறவில்லையே உந்தன் மனம் அந்த
பேதை ராதையிடம்
நேரமில்லையே எனக்கு இன்னும் நல்ல காலம் வல்லையே
கூறவில்லையே காதலை என்னிடம் வர தயக்கமில்லையே
சோரவில்லையே நெஞ்சம் என்னை இன்னும் நீ சேரவில்லையே (a)
உற்றாரும் இல்லை எந்த ஊரும் சொந்தமில்லை
கற்றாரும் கூட இல்லை கல் நெஞ்சம் கனியவில்லை
பெற்றோர்கள் போன இடம் பேதை நானும் போய் விடவோ
ஆற்றாமையால் புலம்புகின்றேன் ஆறு நாளாச்சுதே (ஆ)
*ஏழாம் நாள்*
இன்றே கடைசி இந்த பேதை சுந்தரி
இன்று விடும் மூச்சே இறுதி (இ)
வந்து விடு கண்ணா என்னை
உன் கரத்தால் கட்டி விடு கண்ணா (இ)
எப்படியோ போகட்டும் என்று என்னை விட்டிடாதே
எப்படியோ அந்த ராதையை ஏமாற்றி விட்டு விடு
நிப்பாட்டி விட்டிடுவேன் நீளமான எந்தன் மூச்சை
சிப்பாய்கள் சூழ அந்த அந்தகனும் அருகில் வரான் (இ)
கண்கள் இருளுதே
உன்னைக் காணாத கண்கள் இருளுதே
செவியும் மந்தமாகுதே
உந்தன் புல்லாங்குழல் ஓசை கேளாமல்
செவியும் மந்தமாகுதே
இதழும் இழுக்குதே உந்தன் இதழில் இதழ்
பதிக்காமல் இதழும் இழுக்குதே
பதத்தை தருவாய் கண்ணா பேதை எனக்கு உந்தன் பரம பதத்தை தருவாய் கண்ணா (இ)
(இருக்கும்போது சேரவில்லை, அப்படியே அந்த பேதை சுந்தரியின் உயிர் கண்ணனுடன் கலந்து விட்டது.)
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 270
ஜயசக்தி.
மிக அருமை கவியோகியாரே
சுந்தரியின் தாபம் மனதை உருக்கியது.
வாழ்த்துக்கள்