காதி வித்யை

காதி வித்யை
ஸ்ரீ குருனாதரின் அறிவுரைப்படி நாம் ஜபிக்கும் வித்யை காதி வித்யை (கவில் தொடங்கும் வித்யை) அல்லவா? அதை பற்றின மஹிமையை விளக்கும் சில வாக்கிய சந்தங்கள். (புரிந்து கொள்ள வசதியாக $+@ என்ற குறிப்புகள் கீழே கொடுத்துள்ளேன்)
சந்தம் : சிவவாக்கியர் பாடல் அல்லது
முதாகராத்த மோதகம் துதி
நந்தி சந்திரன் குபேரனாதி பதின்மர்கள்+
அந்தி சந்தி அனைத்திலும் அறிவினாலே ஜபித்திடும்
பிந்தி பிறப்பறுக்கும் பரத்தினது மந்திரம்
அந்தகாதி வித்தை தன்னை ஆரும்காண வல்லீரோ
காவும் ஏயும் ஈயும் லகாரமும் ஹிகாரமும்
மேவும் கோயில் ஏறிட மனதுளே உதிக்குமே
சாவும் நோவும் போய்விடும் சதா ஜபிக்க வல்லீரேல்
நாவு நாவு நல்ல நாவு நாத்தழும்பு ஏறுமே
சக்கரத்தின் நடுவிலே சூழ்ந்து நிற்கும் காதியை
அக்ஷரத்தின் லக்ஷமாய் அறிந்து கூற வல்லீரேல்
புக்கரத்தில் ஒன்று சேரும் சக்தியும் சிவனுமே
இக்கரத்தில் முத்தியும் இயல்பாக வந்திடும்
வேதத்தின் நாயகன் வேணுகை வேந்தனும்
பூதத்தின் பரசிவன் தினம் ஜபிக்கும் மந்திரம்
காதியின் போதமே கருத்தரிக்கும் நெஞ்சிலே
நேதி நேதி நேதியென்று நாலுவேதம் நவிலுமே
வாக்பவ கூடமதை$ வாக்கினால் ஏத்தினால்
தாக்கும் மாய்கை துன்பமும் தூரமாகி போகுமே
தேக்கி நிற்கும் வாசனை தேய்ந்து போகும் மண்ணிலே
ஊக்கம் பெற்று உண்மையை உணர்ந்து காணலாகுமே
காமத்தின் கூடத்தை$ கருத்துள் வைத்து கூறினால்
காமத்தின் கூட்டங்கள் காததூரம் ஓடுமே
சேமத்தை நல்குமே சேரும் தனம் நாளுமே
வாமபாக வேந்தனும் வாக்கில் வந்து நிற்குமே
சக்தி சக்தி சக்தி$ என்று சினமகற்ற வல்லீரேல்
முக்தி முக்தி முக்தியது மூலத்தில் மோதுமே
எக்கதி எனக்கு என்று ஏங்குகின்ற மாந்தரே
பக்தி பக்தி பக்தியது பரத்தின் பாதம் நிற்குமே
கூடம் மூன்றும்@ சொன்னகுரு சென்னியிலே வைத்திடில்
பாடம் கேட்ட காதிலே பரத்தின் ஓசை கேட்குமே
கூடலாடும் தலத்திலே கிளியின் பேச்சு கேட்குமே
பாடலாடும் கவிதையில் பூக்கும் பரசந்தமே
(குறிப்புகள் :
$ க5 ஹ6 ஸ4
+ ஸ்ரீ வித்யையை உபாசிப்பவர்கள்
புக்கரம் = புஷ்கரம் = பிரம்மரந்திரத்திலுள்ள ஸரோருஹம்
@ கூடம் மூன்று = க5, ஹ6, ஸ4
மதுரையம்பதியில் விளங்கும் பரதேவதையின் கையில் உள்ள கிளியின் மொழி – ஸ்ரீ வித்யை)

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments