விழி இல்லா வாழ்க்கை!
காலையில எந்திரிச்சா
கண்ணெதிரே உங்களுக்கு
காட்சி தரும் கதிரவன்!
ஆனா எனக்கு மட்டும்
எப்போதும் இருட்டுத்தான்!
வான வில்லு அழக
எத்தன பேர் ரசிப்பீங்க
எனக்குத் தெரியாது !
எனக்குத் தெரிந்ததெல்லாம்
கருப்புக் கலர் மட்டும் தான்!
தட்டு நிறைய தயிர் சோறு
நிலாவுல திம்பாங்க!
தங்கம்னா தகதகக்கும் !
பொட்டு வெச்ச குங்குமம்
சேப்புன்னு சொல்லுவாங்க !
அம்புட்டும் இருட்டுத்தான்
கம்புடந்தான் என் வாழ்க்க !
தீவாளி பண்டிகன்னா
கலர் கலரா துணி மணிக
எப்படி இருக்கும்னு
எனக்குத் தெரியாது
சொப்பனமும் கண்டதில்ல
பாவந்தான் என் வாழ்க்க!
கண்ணெதிரே தோன்றினாள்
காதலி என்பாங்க!
எந்தன் ஒரே காதலி
கருப்புக் கண்ணாடிதான்!
கண்ணாடி முன்னாடி
காலை மாலை நின்னுகிட்டு
மேக்கப்பு போடுவாங்க!
ஆனா
என்னோட முகத்த கூட
எப்பொதும் நா பாத்ததில்ல!
அழகுன்னா என்னான்னு
பேச்சுக்கும் தெரியாது!
சாதி ம்பாங்க ! சனங்க என்பாங்க!
மோதிகிட்டு சாவாங்க !
இதெல்லாம் சத்தியமா
எனக்குத் தெரியாது
எல்லாரும் சரி சமந்தான்!
உங்க எல்லாருக்கும்
வெளியில வெளிச்சந்தான்!
யாருக்கு தெரியும்க
உள்ளுக்குள்ள இருட்டு போலும்!
எனக்கு மட்டும்தான்
வெளில இருட்டினாலும்
உள்ளுக்குள்ள எப்பொதும்
கள்ளமில்லாம எரியும்
ஆயிரம் வாட் பல்புங்க!
கலர் டிவி இல்லயின்னு
எனக்கு கவல ஏதும் இல்லங்க!
வாழ்வே சினிமான்னு
என்ன பார்த்தவங்க சொல்றாங்க!
கண்டத பார்க்காம என் காட்சி ஓடுதுங்க!
என் கண்ணு தெரியுதுன்னு
எப்போதும் சந்தோஷமா
முப்போதும் இருந்திடுங்க!
ஏதோ பாடிபிட்டென்,
கண்ண மூடிக்கிட்டு
கொஞ்சம் யோசியுங்க!
போட்டி பொறாமையின்னு
பொச்சரிப்பு வேண்டாங்க!
என் விழி இல்லா வாழ்க்கைங்க
உங்கள விழிக்க வைக்கும் கவிதைங்க!
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 155
Super Kavithai sundar. வாழ்த்துக்கள்