ஜயசக்தி.
(நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே)
இப்போது வரை……
- அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் வரவில்லை
தொழுதாலுன்னை தொடலா மென்பா ரெனக்கறிவி லெதுவும் எட்டவில்லை
கழுதைபோல பொதியை சுமக்குமெனக்கு கருணை பெறவும் வழியில்லை
பழுத்தமெய் ஞானம் வருவதற்குன் னருளைத் தவிர கதியில்லை - அன்னை பெற்றாள் தந்தை வளர்த்தார் சுயமாயெதுவுஞ் செய்யவில்லை
தனக்குள் பாருன் தகைமை தெரியுமென்பா ரிருளெயெங்கும் தெரிகிறது
கனக்கும் நெஞ்சம் கடவுள்தன்மை கொள்ளல் எனக்கு எளிதாமோ
தினமும் எந்தன் உடலுமுள்ளமு மெலிதாய் தேயுது அறியாயோ - மகவும் இறந்து கறியும் சமைத்து உணவும் ஊட்டவல்லேனோ
பகலும் தேய்ந்து இரவும் வந்தால் பகலவனவனும் மறைவானோ
துகளாய்ப் போகும் உடலாமிதனை துடியிடை என்று நவில்வேனோ
சகலமு முந்தன் சரணத்தில் வைக்க வீடணனு நானுமொன்றாமோ - நேற்றாஇன்றா நாளும் மெய்யுடல் பொய்யாய் போவது மழகாமோ
குற்றம் செய்வது குழவியின் குணமென களைவதுதானே வழக்கன்றோ
பெற்றோர் என்னை பெற்றுக் களைத்தனர் போதும் பிறவிவோயாதோ
சற்றும் என்னை சிறிதும் பார்க்கா வுறக்கம் சற்றுகளையாதோ - வேதம் சொல்லும் நெறியும் வாகாய் என்னை சாராதோ
போதம் கொண்டு புலம்பும் என்னில் பார்வை சிறிதுவாராதோ
ஏதும்எனக்கு சொந்தம் இல்லை இத்தகை மந்திரம் அறியேனோ
போதும் போதும் உந்தன் உறக்கம் கருடனிலேறி வாராயோ - பத்துப்பத்தாய் பாரினில் நீயும் பிறந்தது உலகோர் கூற்றாமே
இத்துவிழுமுன் உந்தன் உருவை என்னில் நீயும் காட்டாயோ
கத்தட்டும் நன்றாய் காணலாம் பிறகென மெத்தன முனக்குவரலாமோ
பொத்தென இவ்வுடல் போவதன் முன்னே பரியினிலேறி வாராயோ - ஏச்சும் பேச்சும் இச்சக மாந்தர் இயல்பதுனானும் அறிவேனே
மூச்சது நிற்குமுன் மேனியுன் நிழலது மனமதில்சற்று படராதோ
துச்சமாயுடலதை துறந்திட வெனக்கு துணிச்சலு மில்லை யறியாயோ
அச்சமதகன்றிட அச்சுதன்நீயொரு அழகான குருவாய் அன்புடன் வாராயோ - கண்ணெனக் காக்கும் எண்ஞாண் உடலிதை எமனெடுத் தாள்வானோ
குண்டலி யதனில் கூடிடும் அசபையை கொடுமனம் ஜபித்திடுமோ
பண்டைய முனிவரின் புராண சாத்திரம் பிழையிலை யறிவேனோ
கண்ணொளி போனாலும் கதறிட மனமுண்டு காசினி மறைந்திடுமோ - வேதம் மறந்ததால் வேதியர்க்கோர் மழை என்னால் பொய்யாச்சே
பாதம் பணிதேன் பக்குவம் பெற்றிடவோர் பதமதை தாராயோ
இதமாக அருள்வதில் இறைவனே உனக்கோர் எதிரும் உண்டாமோ
விதவிதமாக புலம்பி யென்னாவி வீணில் மடிவதில் புகழுனக்கோ - வேதம் படித்தா லுய்வேனோ வேட்கைவிட்டகல்வேனோ
நாதம் பாடிட அறிவேனோ நாட்கள் பலவும் நகர்ந்திடுமோ
சேதம் ஆகும் உடல்தன்னில் சார்ந்து என்றும் நிற்பேனோ
பாதம் போற்ற எந்தன் வாக்கு பரவசமாக நின்றிடுமோ - கொய்தே மலரை கையால் எடுத்து கொற்றவள் பாதம் வைப்பேனோ
பொய்யா புலவன் குறளில் கூறிய கொள்கை யானும் அறிவேனோ
மனமது இன்று இறந்திடுமோ நாளும் நல்ல நாளிதுவோ
தனமது வருமோ என்கூட இயல்பை நானும் அறிவேனோ - அன்னம் சுவைத்து அறிவை மறந்து பின்னம் பிறவி பிறப்பேனோ
இன்னும் கர்மம் எதுவோ செய்து இயல்பை மறந்தலைவேனோ
உன்னும் நினைவை உடனே தொலைத்து உய்யும் வகையை உறுவேனோ
மன்னும் மாய்கை மனதில் துறந்து மேவும் சுழலை வெல்வேனோ - பட்டம் பெற்றும் பகுக்கும் அறிவை பாங்காய் பெறவும் வல்லேனோ
இட்டம் கொண்டு ஈசன் தாளை இருத்தி மனமும் மகிழ்வேனோ
விட்டம் நோக்கி விழலாய் நேரம் வீணாய் தொலைத்தழுவேனோ
சட்டம் போட்டு செய்யும் வினையை அறுத்து உன்னை தொழுவேனோ - பிறந்தேன் இறந்தேன் இடையில் வாழ்ந்தேன் என்ன வாழ்விதென்பேனோ
கறந்த பாலில் கன்னல் நெய்யும் தின்றேவுலகில் அலைவேனோ
திறந்த வாசல் தன்னில் திருமால் தாளை இருத்த வல்லேனோ
மறந்தும் கோபம் மனிதர்மீது பாயும்நிலையைக் கடப்பேனோ - வருவாய் வருவாய் இறைவா நானும் வருவாய் வாழ்க்கை மறப்பேனோ
திருவாய் உந்தன் சீர்மை பயக்கும் வழியில் சென்றுய்வேனோ
கருவாய் குழியில் கிடந்தே வுழலும் காட்சி மீண்டும் காண்பேனோ
குருவாய் வந்து குணத்தை கொடுத்த கழலை என்றும் மறவேனோ - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
காணாமனமே உனைக் கண்டுவிட்டேன் வீணாய் உனக்கேன் இவ்வலைச்சல்
தூணில் சிம்மம் இருக்கின்றாரவர் காணா துன்னை காக்கின்றார்
பேயாய் அலைந்து புலம்புகிறாய் பேயின் கரும்பது கசந்திடுமோ
காய்த்த பிஞ்சுதான் கனியாகும் தேய்த்த பின்தான் பொன்னொளிரும்
- காலன் கதவருகில் காத்துள்ளான் நாலு பேர்கள் நடுவிலுள்ளார்
காலில் விழுந்து கதறினாலும் நூலில் உள்ளது நடந்தேறும்
பாலும் தேனும் படைத்து விடு பாதகமாயினும் தரும்வீடு
ஒலம் கேட்பதற்குயிர் உண்டோ உண்மை தன்னை உணர்ந்துவிடு - சிதையை மூட்டி சென்றிடுவார் சிகைக்கு ஏனோ அலங்காரம்
பதைபதைக்க வேண்டாவோ பணத்தை ஏனோ மண்ணில் புதைக்கின்றாய்
கதைகள் கருத்தோ டிருக்கையிலே காட்சியி லேனோ மயங்குகிறாய்
விதைக்க விதைனெல் புதைக்கின்றாய் விளைச்சல் தருவதவனன்றோ - மெய்வாய் மூக்கு கண்செவிகள் கடைக்கு வாரா கடைசியிலே
தாயின் முலைப்பால் வேர்வையுடன் இன்னமும் குடிக்க ஏனாசை
மேயும் மான்மேல் ஆசைவைத்த மைதிலி கதையை அறியாயோ
வேயும் கூரையில் கடிதாசி வைத்தே வுன்னை மறந்திடுவார் - ஆட்டம் பாட்டம் எல்லாமே அந்தகன் ஓலை வரும்வரையே
ஊட்டம் தருகின்ற உணவெல்லாம் ஓர்நாள் சீரணம் ஆகிடுமே
கூட்டம் தன்னை விலக்கிவிடு கூப்பிட்டால் சென்றுவிட வேண்டும்
பாட்டம் பாட்டமாய் மழைகொட்ட போய்நில் கோவர்த்தனத்தின் குடையினிலே - இறந்தபின்னர் எங்கு செல்வாய் எண்ணம் சிறிது எண்ணிவிடு
கறந்த பாலது முலைபுகா கவிதை நீயும் அறியாயோ
துறப்பதற்கு துணை யெதற்கு தனித்தே தரணியை விடவேண்டும்
மறப்பதற்கு மனமெதற்கு மரணம் என்பது தனிச் சொல்லே - படுக்கையில் வீழ்ந்த பிதாமகரை பாவம் இவரென விட்டானோ
உடுக்கை கைக்கொண்ட உருத்திரரும் ஓர்நாள் உலகை மறப்பாரே
கடுக்காய் கஷாயம் குடித்தாலும் காலன் வராமல் செல்வானோ
மிடுக்காய் சொக்காய் மேனியிலே மாய்த்திட மறக்குமோ மெய்கூற்று - இன்றே குருதாள் இருத்திவிடு இதைவிட வேறொரு வழியில்லை
நன்னாள் எதுவென பஞ்சாங்கம் நோக்கிட வேண்டாம் நேரமில்லை
பொன்னாள் இன்றென போட்டிருக்கு பக்கம் புரட்ட தேவையில்லை
அன்னாள் வருமுன் வேண்டிவிடு அருகில் இருக்குது அருட்சக்தி
(வேறு)
- பத்தினி ஓர்வழி புத்திரன் ஓர் வழி
சுத்தி உள்ளவர்க்கோ சுற்றிவர பலவழி
எத்திக்கு செல்வதென்று எனக்குத் தலைவலி
பத்திக்கு இரங்கும் பரந்தாமா வழிகாட்டு - பின்வழியால் நெருக்குண்டு பிறந்திடவோ அவ்வழி
மனக்லேசம் மாய்த்திடவோ மண்ணிதிலே பொய்வழி
தனதான்யம் தேடியே திக்கெல்லாம் சேர்வழி
அனவரதம் அன்னையுந்தன் அருள்பெறவோ எவ்வழி - எழுந்தவுடன் பல்துலக்கி வென்னீரில் தான் குளித்து
பழங்கள் காய்கறிகள் பசிதீர பலபுசித்து
பழங்கதைகள் தான்பேசி பல்லிளித்து புறம்பேசி
கழித்தேன் கலிகாலம் காத்திட யார்வருவார் - யமனோலை கைக்கொண்டு கிங்கரர்கள் வருவாரோ
சமயமிது நல்லதென்று செத்திடவோ நான்பிறந்தேன்
குமைந்து கவலையிலே காலமெலாம் கழிப்பேனோ
அம்மையுடன் அத்தனே இப்போதே வந்தருள்வாய் - அயனாவரம் சென்றிட்டால் அடுத்த நாள் வந்திடலாம்
இயமனோடு செல்வதென்றால் எப்போது திரும்புவது?
கயமை மனமே நீ கொற்றவளை வணங்கிவிடு
தயவுடனே திரும்பிடலாம் திருவருள் துணையோடு - பொய்பேசி பிதற்றும் மனம் பொல்லாத பேயின்மனம்
தாய்மடியில் தான்தூங்கி போக்கிடுமே பலகாலம்
நாய்குலைத்தால் நடுநடுங்கும் நாணமிலா எந்தன் மனம்
வாய்வலிக்க பேசினிற்கும் வாயதுவும் மூடாதோ - இன்றே இப்போதே இனிய நாள் எழுந்துவிடு
அன்றே சொல்லிவிட்டார் ஆன்றோரும் பஞ்சாங்கம்
கன்றுக்காய் இருக்கும் பால் குடித்தல் பாவமன்றோ
என்றேநான் ஈடேற இறைவனே என்முன்னே வந்துவிடு - பசிக்கு மலைபோலே பலகாலம் உணவுண்டேன்
நிசிக்கு தூங்கியே நாளெல்லாம் போக்கிவிட்டேன்
உசிதம் இவன் என்று உருத்திரனார் நினைப்பாரோ
கசியும் குருதியிலே இன்னும் குறுகிப் படுப்பேனோ - வெறுத்து ஒதுக்கிடவோ வேதாந்தம் பயிலவில்லை
கறுத்த வானமது கொட்டி மழை பெய்யவில்லை
உறுத்தும் மனமதிலோ ஓங்காரம் ஒலிக்கவில்லை
கறுத்த மணிவண்ணா கண்ணெதிரே தோன்றுவையோ - திருமலை வசிப்பவனே திருவருள் தருவாயோ
உருவளர் உடலாரை உந்தன்வசம் வைப்பாயோ
கருவளர் கர்மம்தன்னை கொன்றிட வருவாயோ
தருவளர் தரணியிதிலே தத்துவம் அருள்வாயோ
(வேறு)
- உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே
பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே
தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன் தளையது தட்டும் வெண்பாவே - பணத்தைக் கேட்பார் குணத்தைப் பாரார் பாரின் மக்கள் சேர்ந்தேனே
கனத்தின் வேதம் கடுகும் கல்லா கல்மனத்தோடு வாழ்ந்தேனே
சினத்தைத் திருமணச் சீராய் பெற்று சிறிய வாழ்க்கை வாழ்வேனே
வனத்தில் வாழும் விலங்கைப்போல வணங்கா தலையைக் கொண்டேனே - நாளும் கோளும் நன்மை செய்யும் நானும் அதனை அறியேனே
மூளும் இருளில் மூழ்கி நானும் முத்துக் குளிப்பதாய் நினைத்தேனே
தோளைக் குலுக்கும் தோளியர் மீது தீராக் காதல் கொள்வேனே
தேளின் பெருமாள் கோயில் சென்று தேறும் வகைநான் தெரியேனே - குருவும் வந்தார் குலத்தில் சேர்த்தார் திரும்பவும் தரணியில் வீழ்வேனோ
கருவும் இருட்டு கண்ணும் குருடு தெருவில் நடப்பது சரியாமோ
உருவம் பலவும் உலகில் எடுத்து உழல்வது போதுமோ உணர்வேனோ
கருவம் கொண்டு கவிபல இயற்றி பெருமையில் பொழுதும் போய்விடுமோ - உடலின் உள்ளே உறுபொருள் கண்டு ஓம்புதல் மூலன்போல் தெரியேனே
கடலின் உப்பு கடல்போல் உண்டு காயம் இதனை காப்பேனே
மடலும் வந்தால் மேற்கூரை சொருகும் மேதினி சத்தியம் என்பேனோ
குடலும் குரம்பையும் தோயும் கருவில் குந்தியே அமர்ந்திட நினைப்பேனோ - குந்தியைபோலே கொடுத்திடு துன்பம் என்றே உரைத்திட வீரமில்லை
அந்தி சாய்ந்திட அமர்ந்து வணங்கிட புந்தியில் நெறியும் புகுந்திடுமோ
வந்தியத்தேவன் கதையில் வந்திடும் சிவிகையில் செல்வது யாராமோ
நந்தினி மாயையோ அந்தகன்* வருவனோ அந்தத்தில் தெரியவந்திடுமோ
(* அந்தகன் என்பது இருபொருள் – இயமன் அல்லது மதுராந்தகன்)
- இரசமும் கூட்டும் மலைபோல் உண்பேன் நாமரசத்தை சுவைப்பேனோ
சரசம் கொண்டே சாத்திரம் மறந்தேன் சாதகம் எதுவும் செய்வேனோ
முரசும் கொட்டும் மாலையும் கட்டும் மரணம் சுமக்க மறப்பேனோ
தரிசாம் நிலத்தில் தண்ணீர் விட்டால் தானியம் அதுவும் விளைந்திடுமோ - ஒன்றைக் கொடுத்து இரண்டைக் கேட்பார் மூன்று உலகிலும் பொதுவாமே
நான்காம் மறையும் ஐந்தாம் புலனும் ஆறாய் கொண்டு எழுவேனோ
எட்டும் தூரம் எங்கேயோ? ஒன்பது ஆவரணம் கடப்பேனோ
ஓட்டும் பத்தின் திசையில் தயரதன் ரதமாய் உடலை அறிவேனோ
(வேறு)
- பத்து மாதம் அன்னை வயிற்றில் துன்பம்
கத்தி வெளி வந்தால் குடலில் ஒரு துன்பம்
தத்தி தவழுகையில் தரையில் படுந்துன்பம்
எத்தி எழுகையில் இடறி விழுந்துன்பம் - விளையாட்டில் வழுக்கி விடும் துன்பம்
வேளா வேளைக்கு வாட்டும் பசித்துன்பம்
காளை பருவத்தில் காமம் பெருந்துன்பம்
மூளை கசக்கியே அலுவலில் வரும் துன்பம் - பிள்ளை பிறக்கையிலே பாசம் ஒரு துன்பம்
பிள்ளை வளர்ப்பிங்கே பாடாய் படும் துன்பம்
உள்ளம் கடுஞ்சொல்லால் உலகோர் தரும் துன்பம்
வெள்ளம் பனி புயல்கள் இயற்கை அது துன்பம் - வியாதி வெக்கைகள் உடலுக்கது துன்பம்
யயாதி போல் முதுமை வருமோயென துன்பம்
ஓயாமல் ஒழியாமல் தொடரும் இத்துன்பம்
வாய்கோணல் இழுக்க மரணம் சுடும் துன்பம். - இத்தனை துன்பத்திலே இடையில் ஒரு துளியின்பம்
அத்தனை மறவாத ஐந்தக்ஷரம் தரும் இன்பம்
பித்தா பிறைசூடி என போற்றல் வாக்கின்பம்
சுத்தாதே மனதே நீ சுந்தரனே மனத்தின்பம்
(வேறு)
- விதி கூறும் வேதங்கள் விடை கூறும் வேதாந்தம்
நதியாடும் நல்லெண்ணம் நாட்கிழமை நல்விரதம்
எதிலும் செல்லாமல் இருக்குது எந்தன் மனம்
பதியான பரமேசா பரிகாரம் பகன்றிடுவாய் - தினம் குளித்து நீர் பூசி நடிக்கவும் நானில்லை
கனம் கோர்ட்டார் என்பானே கடைசியில் (சித்திர) குப்தனுமே
சினம் செருக்கு இதுதவிர சீராக ஏதுமில்லை
தனம் போதும் என்ற எண்ணம் தீர்மானமாக இல்லை - கோவிந்தா இராமாவென்று கோஷம் போடவில்லை
தாவித்திரியும் மனம் தக்கணமும் நிற்கவில்லை
சாவித்திரி போன்று சாவை வெல்ல திறமில்லை
பாவித்து பூஜை செய்யும் பாத்திரமும் நானில்லை - அடைகாக்கும் புறாகூட கோபுரத்தை சுற்றி வரும்
மாடவீதி பிராகாரம் சுற்றினாலும் பலனுண்டு
நாடகம் நடித்தாலும் நாடிடலாம் மண்டபத்தில்
கடைவீதி நாய்போல சுற்றி வீணாய் சுழல்கின்றேன் - பரிவுகாட்டும் குரு நாதா புலம்புவதைக் கேட்பாயோ
உரிமையுடன் உபதேசம் உட்செவியில் உரைப்பாயோ
கரிசனம் காட்டாது காலம் பல கடத்துவதேன்
புரிபட வில்லை ஐயா புனர்ஜன்மம் எனக்குண்டோ - சிறிதே வாழ்நாள் சுழலும் மனதே சிந்தனை செய்வாயே
கரிநாள் இன்றென காலம் கடத்தி கடவுளை மறப்பாயே
திரியும் பாலென வெள்ளை மனதை தீமையுரியில் வைப்பாயே
புரியும் உண்மை பிறக்கும் உடலில் பரத்தைக் காண்பாயே - உள்ளே இருக்கும் ஒளியை காணாய் வெளியே திரிவாயே
வெள்ளப் புனலாய் கருணை இருக்க கள்ளதீயில் மிதப்பாயே
அள்ள அள்ள குறையா அன்பை அனைவருக்கும் அளிப்பாயே
முள்ளாய்க் குத்தும் பலாவின் உள்ளே இனிக்கும் தேனேநீ - அன்றே தந்தான் அழகிய குருவும் அத்தனை உபதேசம்
இன்றே அதனை இதயம் பொருத்தி இறையைக் காண்பாயே
கன்றாம் பசுநீ பதியாம் இறைவன் காலடி செல்வாயே
கொன்றே அகந்தை கொளுத்திப் போடு கிடைக்கும் பரயின்பம் - தின்னும் கவலை தூரத் தள்ளு திருவருள் அருகினிலே
பொன்னும் மணியும் பூணும் லலிதை பாதம் பணிவாயே
சிந்தையில் வீணாய் சங்கடம் ஏனோ சொந்தம் அவளன்றோ
சிந்தா மணியில் சந்ததம் அருள சக்தியும் உள்ளாளே - கர்மம் தன்னை கைவிட்ட பேருக்கு கடிதாம் முத்தியுமே
கர்மம் செய்தும் பலனை விட்டால் முத்தியும் கையினிலே
உர்வாருகம் உடையும் உடலாம் பூண் கட்டி வைப்பாயோ
கர்வம் தன்னை உடனே விட்டு கழலினைப் பணிவாயே - பிழையினில் பெரும்பிழை பேதை நான் புரிந்தனே
மழையினில் தூசாக மறைத்து நீ அருளுவாய்
தழைத்திடும் அன்பிலே திளைத்து நான் நின்றனே
அழைத்திடும் காலனை உதைத்த பாதம் உன்னதே - பத்து மாதம் உன்னுதரம் உதைத்து நான் உருண்டனே
கத்துவேன் கதறுவேன் உன் கண்ணில் நீர் பெருகுமே
பெத்துபிழைத்தனை பாரமாய் எனை சுமந்தனை
ஆத்தாளை மறந்தபேர்க்கு அத்துவிதம் சித்தியோ - சுட்டகாசைப் பொன்னாக்கும் சூத்திரம் அறிகிலேன்
விட்டகுறை தொட்டகுறை வேதாந்தம் சற்றறிவனோ
விட்டத்தில் சொருகும் மடல் விழுமுடல் சுமப்பனே
பெட்டகத்தில் வைத்து பூசை தினம் தினம் செய்வனே - நினைவில் நிற்கும் நாளெலாம் ஆவரணம் ஒன்றதே
கனவில் காணும் காட்சியோ இரண்டான பூஜையே
தன்னில் தோயும் சுழுத்தியும் மூன்றான தன்மையே
என்னில் உன்னைக் காண்பது ஈச்வர விசாரமே - பண்ணி பண்ணி பூஜையில் பாத்திரம் விரிப்பனே
எண்ணி எண்ணி ஷன்னவதி ஏற்றவாறு கூறுவேன்
கண்ணை மூடி காட்சியை கருத்தினுள்ளே கண்டபேர்க்கு
திண்ணையிலே தூங்கினாலும் திண்ணமதே பூஜையாம் - அறிவு நான் அனந்தம் நீ ஆக்கையுள் பொருளும் நீ
துரீயமும் அதற்குமேலும் தூங்கும் வகை அறிந்திடில்
பெரிய பேரைக் கொண்ட பெரும் நாயகியாம் உந்தனை
வரித்து எந்தன் உள்ளத்தில் படைத்து பூஜை செய்வனே - குறித்து வைத்த ஜாதகத்தில் கூற்றின் நாள் இருக்குமே
பறித்து வைத்த பூவினை பாதத்தில் தூவிடின்
குறித்த நாளில் கூற்றுவன் கொண்டுபோக மறப்பனே
உறிக்கும் சட்டை சர்ப்பம்போல் உடலிதை உணர்வனே - கரைத்து நான் குடிக்கவில்லை கீதையும் புராணமும்
உரைத்து பார்க்க வில்லை எந்த உரையினது உண்மையும்
விரைத்து நிற்கும் மாய்கையும் வேகம் குறைத்து விலகுமோ
நரைத்துபோகும் முடியைக் காண விவேகமும் வாருமோ - காலை மாலை சந்தியில் அருக்கியம் அளிப்பனே
சூலை தீர்க்கும் திருநீறு நெற்றியில் அணிவனே
வாலை உந்தன் தாளைப் பற்றி வாக்கிலே உரைப்பனே
ஓலை வரும் முன்னர் எந்தன் உருவினை உணர்த்துவாய் - முன்பிறவி நானிருந்தேன் இப்பிறவி வாழ்கின்றேன்
பின்பிறவி எனக்குண்டு புரிவதென்ன?
முப்பிறப்பும் இருப்பதனால் முக்காலம் நானிருப்பேன்
இப்போது புரிந்து கொண்டேன் எப்பொழுதும் நானுண்டு - உண்டுண்டு உறங்குகிறேன் உலகினிலே உலவுகிறேன்
வண்டுதேடும் பூமலரை பறித்தெடுத்து போடவில்லை
தண்டுள்ள தாமரையின் யோகனிலை நானறியேன்
கண்டுள்ளே கடவுளினை கைதொழுது நின்றறியேன் - தினம் தினம் சோறுதின்று திரிவதன்றி வேறறியேன்
கனம் கனம் வேதகனம் கற்றறியேன் கொள்கையிலேன்
மனம் மனம் சுழலுவதால் ஒரு நொடியும் நின்றறியேன்
சினம் சினம் கொண்டு மிக எளியோரை ஏசுகிறேன் - தனத்திற்கு வேலை செய்து திருவருளில் ஏக்கமிலேன்
வனத்திற்கு செல்வதற்கோ மனதினிலே துணிவில்லை
தினத்திற்கும் விழலாக அலைகின்றேன் அறிவுமிலேன்
சனத்திற்கு சனம் மாறும் காலத்தில் கட்டுண்டேன் - கைபேசி கைவிட்டால் படபடப்பாகும் மனம்
தைமாதம் பிறக்குதப்பா தயை செய்ய வேண்டுகிறேன்
சுதை வண்ண கோபுரத்தை கண்ணிரண்டால் காணுகிலேன்
பதைக்குதப்பா என்நெஞ்சம் பாதுகாக்க வேண்டுகிறேன் - வேணமட்டும் உண்டாச்சு இன்னும் வேணுமோ காய்கறிகள்?
ஆனமட்டம் அன்னமது ஆக்கியே உண்டாச்சு
தேனமுது திகட்டும்வரை தினம் தினம் குடிச்சாச்சு
கானமது காதினிலே குடையும் வரை கேட்டாச்சு - இன்னும் ஆசை தீரவில்லை ஏக்கமது ஏறவில்லை
மன்னும் விதி இனியுமுண்டோ மனமது இறக்கவில்லை
தன்னடக்கம் தகையவில்லை திரிபுரையை துதிக்கவில்லை
மண்ணடக்கம் ஆகும்முன்னர் மாதாவை எண்ணிவிடு - துக்கமது தொலையவில்லை தூக்கமது கலையவில்லை
மக்கள் மனை வைதும் வைராக்கியம் வரவுமில்லை
சிக்கிய மீனாக துள்ளுகின்றேன் துவளுகின்றேன்
பாக்கி வைத்த பிராரப்தம் கரைந்திடட்டும் கடலினிலே - தானாக முன்வந்து தலையினிலே கைவத்தார்
நானென்று எழுமிடத்தை நாடிடவே செய்தி சொன்னார்
மானாக தாவினிற்கும் மனதினையே ஆண்டு விட்டார்
ஏனின்னும் ஏக்கமப்பா குருதாளை வணங்கிவிடு - அன்பு அன்பு என்று பேசி என்றும் உண்மை அன்பை அறிகிலேன்
வம்பு வம்பு செய்யும் மனதை வோரிடத்தில் நிறுத்திலேன்
சம்பு சம்பு என்று சொல்லி சங்கரனை தினம் பஜிக்கிலேன்
அம்பு அம்பு கொண்டு அரனை அருச்சுனனாய் அடிக்கிலேன் - கல்லாலே தினமடித்த சாக்கியரும் ஆகிலேன்
பல்லாலே கடித்த பூசை கண்ணப்பன் நானிலேன்
தில்லை வாழ் அந்தணராய் தோத்திரத்தை கூறிலேன்
கொல்லையிலே மகமறைத்த அப்பூதி நானிலேன் - அறுபத்தி நால்வரோ வாழும் தில்லை மூவாயிரவரோ
உறுபத்தி ஆகிவிட்டேன் உண்மையை அறிவனோ
கருப்பத்தில் காமேசி கருணையை ஊட்டினாள்,
விருப்பத்தில் வேதமறை வேதாந்தம் கொள்வனோ? - பிறவிக்கு ஆஸ்பதம் பிள்ளை குட்டி பாசமோ
துறவிக்கு அன்னமிட துணைவியும் வேண்டுமே
குருவிக்கும் குடும்பம் உண்டு கொஞ்சி பேசி குலவுமே
கருவும் குணம் கொண்ட மனிதர் குருவியினும் சிறியரே - சித்திரைக்கு சொக்கருண்டு வைகாசி விசாகமே
பத்திரை மாத்தாக மனப்பக்குவதிற்கே பண்டிகை
சுத்திரைத்தார் அரிசியை சுப்பிரமணி ஏழ்மையில்
கத்திரைத்து பாடும் பாடல் காதில் விழ வில்லையா - நித்திரைக்கு தினம் தினம் நாளும் பொழுதும் நகருது
சத்திரமாம் இந்த வாழ்க்கை சுருதியும்கூட சொல்லுது
பத்திரமாய் பகல்வேஷம் போட்டு நாளும் போகுது
சித்திரத்தில் உள்ள காயை சீவித்தின்ன முடியுமோ - மாய்கை வந்து மூடுதற்கோ மந்திரம் நான் சொல்வது?
தாய்மை குணம் வருவதற்கே தந்திரங்கள் உதவுது!
வாய்மை வெல்லும் என்ற சொல்லும் நம் நாட்டின் உயிரதே
காய்ந்த விதை முளைக்குமோ கடவுள் மட்டும் அறிவரே - போட்டெரித்து பொசுக்கிடு பிராரப்த வினைகளை
சுட்டெரிக்கும் தீயிலே சோம்பலை கொட்டிடு
வாட்டுகின்ற வெய்யிலில் கர்மவினை போட்டெரி
மூட்டுகின்ற மூலத் தீ போகியென்னும் பண்டிகை
தொடரும்..,…..
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 466